ராமலிங்க அடிகளார் (திருவருட் பிரகாச வள்ளலார்) அருளிய திருவருட்பா தொகுப்பிலிருந்து.
பொழுந்துவிடிந்த தென் உள்ளமென் கமலம்
பூத்தது பொன்ஒளி பொங்கிய தெங்கும்
தொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாம்
சொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவே
முழுதும் ஆனான் என ஆகம வேத
முறைகள்எ லாம்மொழி கின்றமுன் னவனே
எழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் ஜோதி
என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
2.
துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம்
தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்
சிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமா
சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த
நற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம்
நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார்
எற்குண வளித்தஎன் அருட்பெருஞ் ஜோதி
என்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே.
3.
நிலந்தெளிந் ததுகண மருங்கின சுவண
நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற
அலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய்
அழிந்தது கழிந்தது மாயைமால் இரவு
புலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப்
போற்றியோ சிவசிவ போற்றிஎன் கின்றார்
இலங்குரு வளித்தஎன் அருட்பெருஞ் ஜோதி
என்குரு வேபள்ளி எழுந்தரு ளாயே.
4.
கல்லாய மனங்களும் கரையப்பொன் ஒளிதான்
கண்டது கங்குலும் விண்டது தொண்டர்
பல்லாரும் எய்தினர் பாடிநின் றாடிப்
பரவுகின் றார்அன்பு விரவுகின் றாராய்
நல்லார்மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும்
நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே
எல்லாஞ்செய் வல்லஎன் அருட்பெருஞ் ஜோதி
என்தெய்வ மேபள்ளி எழுந்தருள் வாயே.
5.
புன்மாலை இரவெலாம் புலர்ந்தது ஞானப்
பொருப்பின் மேல்பொற்கதிர் பொலிந்தது புலவோர்
சொன்மாலை கொடுத்தனர் துதித்துநிற் கின்றார்
சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம்
மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார்
வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார்
என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் ஜோதி
என்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே.
6.
ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்
அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி
அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே
இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் ஜோதி
என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.
7.
சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார்
சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார்
நினைப்பள்ளி உண்ணத்தெள் ஆரமு தளிக்கும்
நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார்
முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி
முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே
எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் ஜோதி
என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே.
8.
மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு
வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான்
கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே
கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார்
பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டே
பாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார்
இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் ஜோதி
என்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே.
9.
மருளொடு மாயைபோய்த் தொலைந்தது மதங்கள்
வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்
அருள்ஒளி விளங்கிய தொருதிருச் சபையும்
அலங்கரிக் கின்றனர் துலங்கிவீற் றிருக்கத்
தெருளொடு பொருளும்மேன் மேல்எனக் களித்துச்
சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே
இருள்அறுத் தெனைஆண்ட அருட்பெருஞ்ஜோதி
என்வள்ள லேபள்ளி எழுந்தருள் வாயே.
10.
அலங்கரிக் கின்றோம்ஓர் திருச்சபை அதிலே
அமர்ந்தருட் சோதிகொண் டடிச்சிறி யோமை
வலம்பெறும் இறவாத வாழ்வில்வைத் திடவே
வாழ்த்துகின்றோம் முன்னர் வணங்கி நிற்கின்றோம்
விலங்கிய திருள்எலாம் விடிந்தது பொழுது
விரைந்தெமக் கருளுதல் வேண்டும்இத் தருணம்
இலங்குநல் தருணம்எம் அருட்பெருஞ் ஜோதி
எம்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
Post a Comment