திருமண தடை நீங்க பனைமலைக் கோயில் / Remedies for obstacles of marriage
திருமண தடை நீக்கும் ஓர் அற்புத ஸ்தலம். அது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனந்தபுரம் அடுத்த பனைமலை பேட்டை என்ற ஊரில் உள்ளது.
செஞ்சியிலிருந்து அனந்தபுரம் வழியாக விழுப்புரம் செல்லும் வழியில் பனை மலை கோயில் உள்ளது. அனந்தபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிடத்தில் கோயிலுக்கு நடந்து சென்று விடலாம்.
மிகப் பழமையான கோயிலுக்கு வந்துள்ளோம் என்ற உணர்வை தாண்டி ஏதோ சுற்றுலா தளத்திற்கு வந்து விட்டோமோ என்ற எண்ணம் தோன்றுவதில் வியப்பில்லை. காரணம் மலையை சுற்றியுள்ள இயற்கை அப்படி நம்மை நினைக்க வைக்கிறது.
இங்கு மலைமீது அருள்மிகு அஸ்ததாளாம்பிகை உடனுறையும் தாளகிரிஸ்வரர் அருள்பாலிக்கிறார். திருமணம் ஆகாதவர்கள் பிரதோஷ காலத்தில் அம்மன் காலடியில் தங்கள் பிறந்த ஜாதகத்தை வைத்து மனமுருகி வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடப்பதாக ஐதிகம்.
ஞாயிறு தோறும் மாலை 4.30 – 6.00 அளவில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. திருமணமாகாத ஆண்களும் பெண்களும் பெருமளவில் கலந்து கொள்கின்றனர்.
இங்கு ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள், படி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சுனை |
லிங்கங்கள் அனைத்தும் கரிய நிறக்கல்லில் பளபளப்பாகவும் திரட்சியோடும் அமைந்து கண்ணை கவர்கிறது.
உலகம் புகழும் அஜந்தா, எல்லோராவிலுள்ள குகை ஓவியங்களைப் போன்றது, பனைமலை கோயிலில் உள்ள பார்வதியின் எழிலோவியம் என்கின்றனர்.
கோயிலின் சிறப்பு என்னவென்றால் (1300 ஆண்டுகளுக்கு முன்னர்) கிபி 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களில் கலைக்கடல் என்று பெயர் பெற்ற இரண்டாம் நரசிம்மன் எனும் ராஜசிம்மனால் கட்டப் பெற்றது, இந்த பனைமலைக் கோயில்.இம்மன்னன் தான் காஞ்சியில் கைலாய நாதராலயத்தையும், மாமல்லபுரத்து கலைச் செல்வங்களையும் தோற்றுவித்தவன் என்கிறது வரலாறு.
பனைமலை மலைக் கோயிலும் பரந்து கிடக்கும் ஏரியும் பார்க்க கண் கொள்ளாக்காட்சி. வடக்கே செஞ்சி, தெற்கே விழுப்புரம், தென் மேற்கே திருக்கோவிலூர் வரையுள்ள இடைப்பட்ட பகுதியில் பெரிய ஏரி என்றால் அது பனை மலை ஏரி தானாம்.
இந்திய தொல் பொருள் துறையின் பாதுகாப்பில் உள்ள பனைமலை மலைக் கோயிலில் போதிய மின் விளக்குகள் இல்லாதது பெரும் குறையாக உள்ளது.
No comments:
Post a Comment