Monday, December 30, 2013

சிவ புராணம் / Sivapuranam


நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

கோகழி ஆண்ட குருமனிதன் தாள்வாழ்க

ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க                                                   5

 

வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க

கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க

சிரங்குவிவா ரோங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க                    10

 

ஈசனடி போற்றி எந்தை யடிபோற்றி

தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி

நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி

சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி                                             15

 

ஆராத இன்பம் அருளுமலை போற்றி

சிவன்அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்

அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய வுரைப்பான்யான்                             20

 

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி

எண்ணுதற் கெட்டா எழிலார் கழல்இறைஞ்சி

விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்

எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்

பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்                           25

 

புல்லாகிப் பூடாய்ப் புழுவாகி மரமாகி

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்                    30

 

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

உய்யஎன் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்கள்

ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே                               35

 

வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா

பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி

மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே                             40

 

ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே                                         45

 

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை      50

 

மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டி

புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி

மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய                               55

 

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்

கலந்த அன்பாகிக் கசிந்துள் ளுருகும்

நலந்தா னில்லாத சிறியேற்கு நல்கி

நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்                                             60

 

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே

தேசனே தேனார்அமுதே சிவபரனே

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேசஅருள் புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப்                                       65

 

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆரா வமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதா ருள்ளத் தொளிக்கு மொளியானே

நீரா யுருக்கியென் ஆருயிராய் நின்றானே

இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே                                    70

 

அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்

சோதியனே துன்இருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்     75

 

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே

காக்கும்எம் காவலனே காண்பரிய பேரொளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற

தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்           80

 

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள்

ஊற்றான உண்ணார் அமுதே உடையானே

வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப

ஆற்றேன் எம்ஐயா அரனேயோ என்றென்று                                      85

 

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்

மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பைக் கூட்டழிக்க வல்லானே

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே

தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே                             90

 

அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று

சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தி  னுள்ளார் சிவனடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து.                                                                      95

 

 

 

பாடல்:- திருவாசகம் 

இயற்றியவர் :-  மாணிக்கவாசகர் 

 
 

Featured Post

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல / Enthan vaazhkaiyin artham solla

  எந்தன் வாழ்க்கையின்  அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு  பிறந்த மகளே என் மகளே        நான் வாழ்ந்தது கொஞ்சம்  அந்த வாசத்தில் வந்துதித்த...