Tuesday, January 24, 2012

விநாயகர் அகவல் / Vinayagar Agaval

 

விநாயகர்  அகவல் 


சீதக் களபச் செந்தா மரைப்பூம் 

பாதச் சிலம்பு பலவிசை பாடப்

 பொன்னரை ஞானும் பூந்துகில் ஆடையும் 

வண்ணமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் 

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் 


வேழ முகமும் விளங்குசிந் தூரமும் 

அஞ்சு கரமும் அங்குச பாசமும் 

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் 

நான்ற வாயும் நாலிரு புயமும் 

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 


இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் 

திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் 

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான 

அற்புதம் நின்ற கற்பகக் களிறே !

முப்பழ நுகரும் மூஷிக வாகன !


இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் 

தாயா யெனக்குத் தானெழுந் தருளி 

மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் 

 திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப் 

பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து 

 

குருவடி வாகிக் குவலயந் தன்னில் 

திருவடி வைத்துத் திறமிது பொருளென 

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் 

கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே 

உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் 

 

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி 

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் 

இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் 

கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 

 

 தலமொரு நான்கும் தந்தெனக் கருளி 

மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே 

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் 

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி 

ஆறா தாரத்(து) அங்குச நிலையும் 

 

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே 

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் 

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி 

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் 

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 


குண்டலி யதனிற் கூடிய அசபை 

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து 

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் 

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே 

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 


குமுத சகாயன் குணத்தையும் கூறி 

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் 

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச் 

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் 

எண் முகமாக இனிதெனக் கருளிப் 


புரியட்ட காயம் புலப்பட எனக்குத் 

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் 

கருத்தினில் கபால வாயில் காட்டி 

இருத்தி முத்தி யினிதெனக் கருளி 

என்னை யறிவித்(து) எனக்கருள்  செய்து 


முன்னை வினையின் முதலைக் களைந்து 

வாக்கும் மனமும் இல்லா மனோலயம் 

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)

இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன 

அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் 

 

 எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)

அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் 

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் 

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி 

அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் 

 

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி 

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் 

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி 

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை 

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 


தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட 

வித்தக விநாயக விரைகழல் சரணே !


                                                                            ---- ஒளவையார் 



Featured Post

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல / Enthan vaazhkaiyin artham solla

  எந்தன் வாழ்க்கையின்  அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு  பிறந்த மகளே என் மகளே        நான் வாழ்ந்தது கொஞ்சம்  அந்த வாசத்தில் வந்துதித்த...